வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவில் 150 ஆடுகள், 300 சேவல்களை பலியிட்டு 2,500 கிலோ அரிசியில் பிரியாணி விருந்து: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சாமி கோயிலில் நேற்று முன்தினம் மாசி வெள்ளியையொட்டி பிரியாணி திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியளவில் நிலைமாலையுடன் கிராம மக்களின் பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இரவு 8 மணிக்கு நிலைமாலையை சாமிக்கு சாற்றிய பின்பு தேங்காயை உடைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்துபவர்கள் பங்கேற்றனர். நள்ளிரவில் முதலில் சக்திக்கிடாய் பலியிடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிடப்பட்டு 2,500 கிலோ அரிசியில் அசைவ பிரியாணி தயாரிக்கும் பணிகள் விடிய, விடிய நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் கருப்பசாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து முனியாண்டி சாமிக்கு சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.