பழனி கோயில் ஞாயிறு விடுமுறை, கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திண்டுக்கல்: பழனி கோயிலில் ஞாயிறு விடுமுறை மற்றும் கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருத்திகை நாளான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளாபூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் ரோப்கார் சேவை, மின் இழுவை ரயிலில் பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரம் வரையிலும், தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல படிப்பாதை, யானை பாதை வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியபடி காணப்பட்டுள்ளது. மாசி மாத கிருத்திகை என்பதால் பக்தர்கள் வருகை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.