வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16-ந் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் 27-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் நேற்று (மார்ச் 1ஆம் தேதி) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி ஜூன்ஹிபோட்டோ சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள நியூ காலனி, சனீஷ் தொகுதியின் கீழ் பாங்க்ரி வீ. டிஷீட் சட்டமன்றத் தொகுதியின் கீழ் ஜபோகா கிராம வாக்குச் சாவடி மற்றும் தோனாக்யூ சட்டமன்றத் தொகுதியின் கீழ் பாஸ்தோ கிழக்குப் பகுதி ஆகியவற்றில் மறு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
முன்னதாக நாகலாந்தில் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்றும், என்டிடிபி 38 – 48 தொகுதிகளிலும், என்பிஎஃப் 3 – 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 – 2 தொகுதிகளிலும் மற்றவை 5 – 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில், மேகாலயா,நாகலாந்து மற்றும் திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது.