வழக்கறிஞர் கட்டணம் வழங்க கோரிய வழக்கு: மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக ஆஜரானதற்கான, வழக்கறிஞர் கட்டணம் கோரி கொடுத்துள்ள மனுவை 12 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியவர் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை. அப்போது, மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்காக உயர் நீதிமன்றத்திலும், சமரச தீர்ப்பாயத்திலும் ஆஜரானார். இதற்காக தனக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடி 94 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 680-யை வழக்கறிஞர் கட்டணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார். அது பரீசிலிக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் 3 வழக்குகளைத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். அப்போதுஅரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதுபோன்ற வழக்குகளில் ஆஜராகும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் மட்டுமே கட்டணமாக வழங்க முடியும் என்று கூறப்பட்டு இருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் உள்ளிட்ட துறைகள் சார்பில் ஆஜராகியுள்ளார். இதுபோன்ற வழக்குகளின் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் பணி மிகவும் முக்கியமானது. அரசின் கொள்கைகளை உறுதி செய்வதிலும், அந்த கொள்கை முடிவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்யாமலிருக்கவும் இவர்களின் வாதங்கள் இன்றியமையாதது.

சட்ட ஞானம் என்பது மிகவும் உயர்ந்தது. அந்தப் பணிகளை செய்யும் திறமையான வழக்கறிஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம மட்டும் வழங்க முடியும் என்ற அரசின் வாதத்தை ஏற்க முடியாது. எனவே, இதுதொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே, வழக்கு கட்டணம் கேட்டு கொடுக்கப்பட்ட மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து உரிய உத்தரவை 12 வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.