ஊராட்சி பகுதிகளை போல் பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை செய்யும் போது அருகில் இருக்கும் ஊராட்சிகளையும் சேர்த்து இணைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாக கூறினார்.
நகராட்சிகளுடன் இணைப்பதற்கு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில் அரசு என்ன மாதிரியான முடிவு எடுக்க உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகளுடன் இணைக்கும் போது 100 நாள் வேலைத்திட்டம் பறிபோய்விடும் என கருதி ஊராட்சி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகளை போல பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்துவதற்காக நடப்பாண்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சி மக்களும் பயன்பெறுவார்கள் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
ஊராட்சி பகுதிகளை நகராட்சிகளுடன் இணைக்கும் போது அரசு நிர்வாக வசதியை மக்கள் எளிதாக பெற முடியும் என்பதோடு, முன்னேற்றத்திற்கான வழி என்பதால் அவ்வாறு செய்கிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
newstm.in