தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக, உயர் அலுவலர்களுடன் கடந்த ஞாயிறு அன்று கனடா சென்றார். அங்கு ஒட்டாவா மாகாணத்தில் கனடா அரசால் பராமரிக்கப்பட்டு வரும் மேஜர் கில் பார்க் பூங்காவை பார்வையிட்டார்.

அப்போது பூங்காவில் உள்ள புராதான சின்னங்களின் விவரங்களையும் மற்றும் அங்கே பூங்கா பராமரிப்பில் எந்த வகையான இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன மற்றும் பூங்காவின் அமைப்பு, இந்த பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பூச்செடிகளின் விவரங்களையும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து திங்கள் அன்று கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவா மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று, அங்கு கனடா நாட்டின் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, கனடா நாட்டின் விவசாய வளங்களை பற்றியும் கனடா நாட்டில் பயன்படுத்தப்படும் உயரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்களையும் அங்கு அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி போன்றவற்றை அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கனடா நாட்டிற்கு சென்று பல்வேறு வேளாண் உத்திகளை கண்டறியும் வகையில் மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு தரமான உரம் விநியோகிக்கும் வகையில் ஆராய்ச்சி செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒட்டாவா மாகாணத்தில் கார்சொனோபி கிராமத்திற்கு சென்று, அங்கு சோயா மொச்சை மற்றும் மக்காச்சோளம். கோதுமை, ஓட்ஸ் பயிர்களையும் மற்றும் பழவகைகள் பயிரிடுவதையும் பார்வையிட்டார்.
வேளாண் அமைச்சரின் இந்த பயணத்தில் தமிழ்நாடு வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குநர் பிருந்தாதேவி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி… உள்ளிட்டவர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.