சென்னை வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை: தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பரங்கிமலையில் சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்தது. சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் வன்னியர் சங்க கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அங்குள்ள கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்” கோரியிருந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வன்னியர் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “கடந்த 33 ஆண்டுகளாக இந்த நிலம் தங்கள் சுவாதீனத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சங்க கட்டிடத்தில், நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள வரும் மாணவர்களிடம் 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர். தற்போது 58 மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் இப்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, அந்த மாணவர்கள் அடுத்த வாரம் வரை அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “இந்த நிலத்தை விற்றவர் குத்தகைதாரர். ஆறு மாணவர்கள் மட்டுமே தற்போது அங்கு தங்கியிருந்தனர். அதில் ஐந்து பேர் தாம்பரத்தில் உள்ள விடுதியில் தங்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரு மாணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், கூடுதல் மாணவர்கள் இருந்தால், அடையாள அட்டையுடன் வந்தால், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனக்கூறி, கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.