ஜூரோங், “சீன இனத்தை சாராத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க சிங்கப்பூர் தயாராக உள்ளது,” என அந்நாட்டு அதிபர் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதை அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், 66, சீன வம்சவாளிகளான இங் கொக் செங், 76, டான் கின் லியான், 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, அதிபர் தேர்தலில் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
சீனர்கள் அதிக அளவு வாழும் சிங்கப்பூரில், வரும் 1ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு மூன்று பேரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழிலேயே பேசி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூர் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. அவர்கள் இனத்தை மட்டும் பார்க்காமல், அனைத்து விஷயங்களையும் தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுத்து வருகின்றனர்.
“சீன இனத்தை இல்லாத ஒருவரை பிரதமராக காண சிங்கப்பூர் தயாராக உள்ளது,” என கூறினார்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நம் அண்டை நாடான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவருக்கு, ஆளும் மக்கள் செயல் கட்சி ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்