மகளிர் உரிமைத் தொகை: மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள் பணம் எடுத்தால்..?! – தீர்வு என்ன?

இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதற்கு முந்தையநாளே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ரூ.1,000 தொகை பலருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அதற்கான குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வங்கிகள் மூலமும், வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு மணி ஆர்டர் மூலமும் வரவு வைக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

`மோடி… ஏழை மக்கள் பணத்தை எடுத்துடாதீங்க!’ – சபாநாயகர் அப்பாவு

அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, “கிராமப்புரத்தில் 500 முதல் 1000 வரையும், நகரங்களில் 2000 முதல் 5000 வரையிலும் , மெட்ரோபாலிடன் சிட்டிகளில் 3000 முதல் 10,000 வரை என வங்கிக்கு வங்கி குறைந்தப்பட்ச வைப்பு தொகையாக மினிமம் பேலன்ஸ்களில் வேறுபாடுகள் இருக்கும். அதை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி குறைவாக வைப்புத் தொகை வைக்கப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து கடந்த 08.08.23-ல் நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் கூறும்பொழுது 21 ஆயிரம் கோடி ரூபாய் இந்த வகையில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல ஏ.டி.எம் அதிகமான முறை பயன்படுத்தியதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக இந்தியா முழுவதும் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, குறுஞ்செய்தி அனுப்பியதற்காக 6 ஆயிரத்தும் 500 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆகமொத்தம் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மினிமம் பேலன்ஸ் இல்லாதது, ஏ.டி.எம்-ஐ அதிக முறை பயன்படுத்திய உள்ளிட்ட காரணங்களால் அரசு அபராதத் தொகையாக வங்கிகள் மூலம் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் அனுமதியில்லாமல் எடுத்திருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் கூறியிருக்கிறார். நம்முடைய முதல்வர், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுக்கு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார். எனவே பாரதப் பிரதமரையும், நிதி அமைச்சரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஏழைகளுக்கு வழங்கும் 1000 ரூபாயில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற பெயரில் தயவு செய்து அபராதத் தொகையை எடுத்து விடாதீர்கள் என்பதையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்தார்.

அப்பாவு

`மினிமம் பேலன்ஸ்…பணத்தை எடுத்துக்கொண்ட வங்கிகள்!’

இந்தநிலையில், வங்கிக் கணக்குகள் மூலம் பணம் பெறப்பட்டவர்களின் கைகளுக்கு பணம் வந்துசேரும் முன்னரே, சம்மந்தபட்ட சிலரின் வங்கிக்கணக்குகளில் `மினிமம் பேலன்ஸ் இல்லை, மைனஸ் பேலன்ஸாக இருக்கிறது’ எனக்கூறி அந்தத்தொகையை வங்கிகள் பிடித்தம் செய்துகொண்டன. அதேபோல, வாங்கிய கடனுக்கான தொகையையும் கழித்துக்கொண்டன. மேலும் சிலரின் வங்கி கணக்குகளில் ஆதார்-பான் இணைக்காததாலும், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்துவந்து டீஆக்டிவேட் ஆனதாலும் பணம் எடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சிக்கல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பொதுவெளியில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். அதேபோல தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் இந்த பிரச்னையை அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தன.

வங்கிகள்…

`ஸ்டாலின் நடவடிக்கை வேண்டும்!’ – கூட்டணிக் கட்சிகள்

குறிப்பாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “வங்கிகள், சேமிப்புக் கணக்கு அல்லது நடப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ள ரூபாய் 1000/-ல் இருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன.

இதனால், சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, தமிழக அரசு வங்கித் துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லை என்கிற காரணத்தினால் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முழுமையாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார்.

வங்கிகளுக்கு எச்சரிக்கை… அமைச்சர் தங்கம் தென்னரசு:

இந்த சர்ச்சை பூதாகரமாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அபராதத்தொகை வசூலிக்கம் வங்கிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுப் பேசியிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மகளிர் உரிமைத் தொகை பெறுவது தொடர்பாக, ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.

அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிரின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகை

`விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்! – கே.என்.நேரு

அதேபோல நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மனு கொடுக்கலாம், மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!” என்றிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.