IND vs AUS 3rd ODI: இந்தியா – ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
வார்னர் – மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். பும்ரா – சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சை இந்த ஜோடி அதிரடியாக தாக்கியது. குறிப்பாக, இந்த தொடரில் மூன்றாவது அரைசதத்தை இன்று பதிவு செய்தார். 8.1 ஓவர்களில் 78 ரன்களை இந்த ஜோடி குவித்தபோது, வார்னர் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கமே அமர்களமாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணி ரன்களை குவித்துக்கொண்டே இருந்தது. ஸ்மித் – மார்ஷ் ஜோடியும் நிதானமாக ரன்களை எடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், இந்த பார்ட்னர்ஷிப் 137 ரன்களை குவித்தது. துரதிருஷ்டவசமாக மார்ஷ் சதத்தை நெருங்கிய வேளையில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்களை குவித்தார்.
சிறிது நேரத்திலேயே ஸ்மித் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் லபுஷேன் நிதானமாக ரன்களை சேர்க்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் லபுஷேன் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கம்மின்ஸ் 19 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, லபுஷேன் 72, வார்னர் 56 ரன்களை எடுத்தனர்.
Innings break!
Australia post 352/7 in the first innings!
Over to our batters
Scorecard https://t.co/H0AW9UXI5Y#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/FBH2ZdnEF6
— BCCI (@BCCI) September 27, 2023
இந்திய பந்துவீச்சில் பும்ரா 3, குல்தீப் 2, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 353 ரன்கள் என்ற இமாலய இலக்கு இந்தியாவின் முன்னாள் இருக்கிறது. இது இந்த போட்டியை வெல்வதற்கான இலக்கு மட்டுமில்லை, உலகக் கோப்பையை வெல்ல தங்களுக்கு வலு இருக்கிறது என்பதை நீருபிக்கவும் இந்தியாவுக்கு இது பெரும் வாய்ப்பாகும். ஆஸ்திரேலியாவை போல் இந்திய அணியின் ஓப்பனர்களாக இன்று களமிறங்கி இருக்கும் ரோஹித் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடி பவர்பிளே ஓவர்களில் ரன்களை குவித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி தான்.
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என தரமான பேட்டர்கள் அடுத்தடுத்து இருப்பதால் தொடக்கம் நிச்சயம் சரியாக அமைய வேண்டும். இந்திய அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இதையும் வென்றுவிட்டால் தொடரை வைட்வாஷ் செய்யலாம்.