மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிற்சாலை ஒன்றில் குறிப்பிட்ட வகை போதைப்பொருள் தயாரிக்கப்படுவது தெரிய வந்து, போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் 300 கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லலித் பாட்டீலும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, குடல் இறக்கம், காசநோய் உட்பட பல்வேறு உடல்நலக்கோளாறு காரணமாக லலித் பாட்டீல் புனே சசூன் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த மாதம் 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து எக்ஸ்ரே எடுப்பதற்காக லலித் பாட்டீலை அழைத்து சென்றபோது தப்பிச்சென்றுவிட்டார். அவனை போலீஸார் கடந்த இரண்டு வாரமாக தேடி வந்தனர். அவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸார் மடக்கி கைது செய்து புனே கொண்டு வந்துள்ளனர்.

இது பற்றி பேட்டியளித்த போலீஸ் அதிகாரி சத்ய நாராயணன், ”குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு புனே கொண்டு வரப்பட்டுள்ளார். 300 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்ததில் லலித் பாட்டீல் முக்கிய குற்றவாளியாவான். அவன் 2020-ம் ஆண்டு 20 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அவன் சிறையில் இருந்து கொண்டே போதைப்பொருள் வியாபாரத்தை கவனித்துக்கொண்டான்.
லலித் பாட்டீல் மருத்துவமனையில் இருந்து தப்பித்து நேராக ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள சலிஸ்காவ் சென்றான். அங்கிருந்து நாசிக், இந்தூர், சூரத், மீண்டும் நாசிக், சூரத், சாம்பாஜிநகர், சோலாப்பூர் சென்று இறுதியாக பெங்களூரு சென்றான். அவனது நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அவன் எந்த ஊரிலும் அதிக நாள்கள் தங்காமல் ஒரு சில நாட்கள் மட்டும் தங்கிவிட்டு மீண்டும் வேறு ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். போலீஸார் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு நடந்து கொண்டான். அவனது கார் மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்ததை கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்து கொண்டோம்.

சூரத் ஹோட்டலில் 3 நாட்கள் தங்கி இருந்திருக்கிறான். லலித் பாட்டீல் தப்பிச்செல்வதற்கு முந்தைய நாள் 2 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் லலித் பாட்டீல் கூட்டாளி சுபாஷ் மண்டல் மற்றும் மருத்துவமனை கேண்டீன் வெயிட்டர் ரபீக் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது லலித் பாட்டீலும், அவனது சகோதரனும் தான் போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது”என்று தெரிவித்தார்.
பாட்டீல் சகோதரன் பூசன் மற்றும் அவனது கூட்டாளி அபிஷேக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாசிக்கில் வசிக்கும் லலித் பாட்டீல் பெற்றோர் தங்களது மகன் கைது செய்யப்பட்டது குறித்து அளித்த பேட்டியில், ”எங்களது மகனுக்கு தண்டனை கொடுங்கள். ஆனால் சுட்டுக்கொலை செய்துவிடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.
இரண்டு காதலிகள் கைது
லலித் பாட்டீல் தப்பிச்சென்றவுடன் தனது இரண்டு காதலிகளுடன் அதிக அளவில் பேசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனது இரண்டு காதலிகளான அர்ச்சனா மற்றும் பிரக்யா ஆகிய இரண்டு பேரையும் போலீஸார் நேற்று இரவு நாசிகில் கைது செய்தனர். இரண்டு காதலிகள் தான் லலித் பாட்டீல் மருத்துவமனையில் இருந்து தப்பிச்செல்ல உதவி இருந்தனர். அதோடு லலித் பாட்டீல் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் இரண்டு பேரிடமும்தான் கொடுத்து வைத்திருந்தான். மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஒரு நாள் இரவு தனது காதலி வீட்டில் தங்கி விட்டு அங்கிருந்துவிட்டு இருபத்தைந்து லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்துசென்று இருப்பது இரண்டு காதலிகளிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.