தார்வாட், : ஓடும் பஸ்சில் மாணவியின் கன்னத்தில், நடத்துனர் ஓங்கி அறைந்தார். இதை கண்டித்து மாணவியின் பெற்றோர், போராட்டம் நடத்தினர்.
தார்வாடில் இருந்து, முகத கிராமத்துக்கு நேற்று முன் தினம் மாலை, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில் கெலகேரி கிராமத்தை சேர்ந்த பிரக்ருதி என்ற மாணவி பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவி புத்தக பையுடன் நின்றிருந்தார்.
கூட்ட நெரிசலில், நடத்துனர் பணத்தை எண்ண முற்பட்டபோது, மாணவியின் புத்தக பை உராய்ந்து, நடத்துனர் கையில் இருந்த பணம் கீழே சிதறியது. கோபமடைந்த நடத்துனர், மாணவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கன்னத்தில் விரல்கள் பதிந்து, வலியால் மாணவி அழ ஆரம்பித்தார்.
வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரிடம் நடந்ததை கூறினார். சம்பவத்தை கண்டித்து, தார்வாட் துணை நகர் போலீஸ் நிலையம் முன்பாக, மாணவியின் பெற்றோரும், கிராமத்தினரும் போராட்டம் நடத்தினர். நடத்துனர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, வலியுறுத்தினர். போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தும், முடியவில்லை.
அதன்பின் நடத்துனர், அங்கு வந்து மாணவியின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டார்.
அதன்பின் போராட்டத்தை கைவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement