வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியின் சாவியை, கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் அடித்தள பகுதி, கடந்த 1993ம் ஆண்டு முதல் பூட்டப்பட்டு, அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஹிந்து அமைப்பு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியில், பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், ”ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியின் சாவியை, கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்,” என, உத்தரவிட்டார்.
ஏற்கனவே, ஞானவாபி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அடித்தள பகுதியின் சாவியும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement