Doctor Vikatan: மீண்டும் மீண்டும் படுத்தும் பொடுகுத்தொல்லை… வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. எனக்கு பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொடுகு நீக்கும் ஷாம்பூ உபயோகித்தும் பலனில்லை. இந்தப் பிரச்னைக்கு வீட்டிலேயே தீர்வு காண எளிய வழிகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

பொடுகில் வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை (விசிபிள்), மற்றும் மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை (இன்விசிபிள்) என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதிலிருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி, நீலி அவுரி பொடி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். தவிர, ஆலிவ் ஆயில், டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் போன்றவற்றையும் ஆன்லைனிலோ, கடைகளிலோ வாங்கிக் கொள்ளுங்கள்.  டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில்…. இரண்டும் அரோமா ஆயில்கள். இந்த அரோமா ஆயில்களை கலப்பதற்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் தவிர்த்து பாதாம் ஆயில், சூரியகாந்தி ஆயில், ஆலிவ் ஆயில் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். 

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், கூடியவரையில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.  

ஆயில்

30 மில்லி ஆலிவ் ஆயிலில் தலா 100 சொட்டு டீட்ரீ ஆயில் மற்றும் ரோஸ்மெரி ஆயில் சேர்க்கவும். சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருக்கிறது ரோஸ்மெரி ஆயில். பலரும் அதை அப்படியே தலையில் தேய்ப்பதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. இந்த எண்ணெய்களைத் தடவிய 20 நிமிடங்களில் மண்டைப்பகுதிக்குள் இறங்கும், நேரடியாகத் தடவுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வேறு எண்ணெயுடன் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கலவையில் தயாரித்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். முதல்நாள் தலைக்குக் குளித்து அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள், நீங்கள் கலந்துவைத்துள்ள எண்ணெயில் சிறிது எடுத்து, பஞ்சில் நனைத்து மண்டைப்பகுதியில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடவும். முடியில் தடவ வேண்டிய அவசியமில்லை.  பிறகு முடியை நன்கு வாரிவிடவும். இந்தக் கலவையை சூடுபடுத்தக்கூடாது.

குளியல்

பொடுதலைப் பொடியையும் நீலி அவுரிப் பொடியையும் சம அளவு எடுத்து, புளித்த மோரிலோ, ஆப்பிள் சைடர் வினிகரிலோ (தண்ணீர் கலந்தது)  கலந்துகொள்ளவும். எண்ணெய் தடவிய மண்டைப் பகுதியில் இந்தக் கலவையை பிரஷ் அல்லது விரல்களின் உதவியோடு தடவவும். பிறகு பெரிய பற்கள் கொண்ட சீப்பால் தலையை வாரிவிடவும். இந்தக் கலவையையும் முடியில் தடவ வேண்டியதில்லை.  மண்டைப்பகுதியில் மட்டும் தடவினால் போதும்.

45 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ உபயோகித்து அலசவும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்யலாம். ஏழெட்டு முறை செய்தாலே பொடுகு குறைந்து, முடி ஆரோக்கியமாக மாறுவதை உணர்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.