
வேறு படத்திலிருந்து தூக்கப்பட்ட நடிகரை வெளிச்சம் போட்டு காட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ்
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இத்தனைக்கும் பெரிய நட்சத்திர நடிகர்கள் என யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதேசமயம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பத்து நண்பர்கள் கொண்ட குழுவில் ஒருவர் தவறி குணா குகைக்குள் விழுந்துவிட, அவரைக் காப்பாற்ற மீதி இருப்போர் நடத்தும் போராட்டம் தான் விறுவிறுப்பான கதையாக சொல்லப்பட்டிருந்தது.
குணா படத்தின் பாடலும் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதால் தமிழகத்திலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த தமிழ் கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு மலையாள நடிகர்கள் என பார்த்தால் படத்தின் தயாரிப்பாளரும் நண்பனை காப்பாற்றுவதற்காக குழிக்குள் துணிச்சலாக இறங்கும் நடிகருமான சவ்பின் சாஹிர் மற்றும் குழிக்குள் தவறி விழுந்த ஸ்ரீநாத் பாஷி இருவரும் தான் ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமானவர்கள்.
இதில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி கடந்த வருடம் ஒரு தொகுப்பாளரிடம் நேரலையின் போது கடுமையாக நடந்து கொண்டார் என்பதால் அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு தொடர்ந்து நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அது விலக்கப்பட்டது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக வேறு ஒரு படத்தில் நடிக்க ஸ்ரீநாத் பாஷி ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களது பெர்பார்மன்ஸ் இல்லை என்று கூறி படத்தில் இருந்து அவரை தூக்கி விட்டார்களாம். இந்த நிலையில் தான் மஞ்சும்மேல் பாய்ஸின் வெற்றி அவரை மீண்டும் கை தூக்கி விட்டுள்ளது.