சென்னை தி.நகர், ஆர்.கே.புரம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தி.நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரும் தி.நகர் ராஜபிள்ளைதோட்டம் பகுதியைச் சேர்ந்த அட்டோ டிரைவர் குமாரும் நண்பர்கள்.
இந்தநிலையில் குமார், தான் ஏலசீட்டு நடத்துவதாக கிருஷ்ணமூர்த்தியுடன் கூறியதோடு அதில் சேரும்படி கூறியிருக்கிறார். அதனால் கிருஷ்ணமூர்த்தியும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்திருக்கிறார். இவர் மட்டும் அல்லாமல் இன்னும் சிலரும் குமாரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியிருக்கிறார்கள்.

கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏலச்சீட்டு முதிர்ச்சியடைந்தது. ஆனால் சீட்டு போட்டவர்களுக்கு பணம் கொடுக்காமல் குமார் ஏமாற்றி வந்தார். அதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் குமாரிடம் பணம் கேட்டனர். அப்போது அவர், தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் கேட்டவர்களை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார் குமார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர், சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் குமார் மீது புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தத் தகவலை கேள்விபட்டதும் டிரைவர் குமார் தலைமறைவாகிவிட்டார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு குமாரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடமிருந்து ஆட்டோ, செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் 20 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. பணத்தை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஆட்டோ டிரைவரான குமார், ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டதோடு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருக்கிறார். அதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் ஏலச்சீட்டு, வாரசீட்டு என்ற பெயரில் பணம் வசூலித்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் சீட்டு போட்டவர்களுக்கு ஒழுங்காக பணம் கொடுத்து வந்திருக்கிறார் குமார். அந்த நம்பிக்கையில் தி.நகர் பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை குமார் நடத்திய ஏலச்சீட்டு மூலம் சேமிக்க தொடங்கியிருக்கிறார்கள். சீட்டு முதிர்ச்சியடைந்த பிறகு பணம் கொடுக்காமல் குமார் ஏமாற்றிய பிறகே எங்களிடம் புகாரளித்துள்ளார்கள். இந்த மோசடி வழக்கில் குமாரை கைது செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
