பஞ்சாப்பில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப்பில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடவும், தேர்வுகளை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை, புதிய தொடக்க தேதிக்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும். மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறியதாவது:- பஞ்சாப் முழுவதும் அரசு, தனியார் மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்படும் என தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.