‘ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாக். பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது’ – கனிமொழி எம்.பி. பேச்சு

மாட்ரிட்: பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பாகிஸ்தானுடனான மோதல்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கலான தன்மையை திமுக எம்.பி கனிமொழி பேசினார். அவர், “இந்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் பேசுவதன் மூலமும், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து இந்த மோதல்களை முடித்து வைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். பாகிஸ்தான் விவகாரம் பலரின் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகம்” என்றார். அவரின் இந்த கருத்துகள் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி எம்.பி அசோக் குமார் மிட்டல்,”இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, பிரான்ஸாக இருந்தாலும் சரி, உலகில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது. பிரதமர் மோடி வசுதைவ குடும்பகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், நாங்கள் வளர விரும்புகிறோம், மற்றவர்களையும் வளர விட விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் பேசுகையில், “பாகிஸ்தான் 1947ல் பிறந்தது, அவர்கள் காஷ்மீரைத் தாக்கினர், பின்னர் அவர்கள் 1965ல் இந்தியாவைத் தாக்கினர். உலகில் எங்கும் ஒரு ராணுவம் தனது சொந்தப் பெண்களையும் மக்களையும் கொன்று, கொன்று, பாலியல் வன்கொடுமை செய்ததை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். பாகிஸ்தான் அதை கிழக்கு பாகிஸ்தானில் செய்தது, அது இப்போது வங்கதேசமாக உள்ளது.” என்றார்.

பாஜக எம்.பி கேப்டன் பிரிஜேஷ் சௌதா, “இது பாகிஸ்தானின் அரசு ஆதரவு பயங்கரவாதம் என்பதை பல்வேறு நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று, நாம் அதற்கு பலியாகலாம்; நாளை, உலகம் இதற்கு பலியாகிவிடும். பல நாடுகள் இந்தியா உட்கார்ந்து பேச வேண்டும் என்று கூறுகின்றன. யாரிடம் பேசுவது என்பதுதான் கேள்வி. பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் நாம் பேச வேண்டுமா? அல்லது அங்குள்ள இராணுவத்துடன் நாம் பேச வேண்டுமா? அல்லது இஸ்லாமிய மதகுருமார்களுடன் பேச வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவில் ராஜீவ் ராய் (சமாஜ்வாதி), மியான் அல்டாப் அகமது (ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி), பிரிஜேஷ் சவுடா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ராஷ்டிரிய ஜனதா தளம்), அசோக் குமார் மித்தல் (ஆம் ஆத்மி), முன்னாள் தூதர் ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.