Vairamuthu: “மரியாதைக்குகூட ஒரு வார்த்தை கேட்கவில்லை..'' – வைரமுத்து ஆதங்கப்படுவது ஏன்?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பழைய பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இதில், முறையாக அந்தந்தப் பாடல்களின் இசையமைப்பாளர் அல்லது அப்பாடல்கள் இடம்பெற்ற படத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுப் பயன்படுத்தும்போது பெரித்தாக பிரச்னை எதுவும் எழுவதில்லை.

மாறாக, எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும்போது அது பிரச்னையாக வெடிக்கிறது.

music
music

சில இசையமைப்பாளர்கள் பெருமிதமாக பயன்படுத்திக்கொள்ளட்டும் என கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

அதேசமயம், `நான் இசையமைத்த பாடல்களை எதற்காக என்னிடம் ஒருவார்த்தைகூட தெரிவிக்காமல் பயன்படுத்துகிறீர்கள்’ என்று நியாயமாகக் கேட்கிறவர்களை, `மற்ற இசையமைப்பாளர்கள் எதுவும் கேட்காதபோது இவர் மட்டும் காசுக்காக இப்படி கேள்விகேட்கிறார்’ எனப் பலரும் கண்மூடித்தனமாக விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், தன்னுடைய பல்லவிகள் பலவற்றை மரியாதைக்கு கூட கேட்காமல் திரைப்பட தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதை ஒருவார்த்தை தன்னிடம் கேட்டுவிட்டு செய்வது அவர்களுக்கு நாகரீகமாகாதா? என கவிஞர் வைரமுத்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

வைரமுத்து
வைரமுத்து

இது குறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைரமுத்து, “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா… பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தைக் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.