சென்னை,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், “பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை. சந்தேகத்திற்குரிய துண்டுகள் இரு அணிகளுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டவை. நடுவர்களால் பந்து முழுவதுமாக கண்காணிக்கப்பட்டது. ஊகத்தின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. உரிய ஆதாரங்கள் இருந்தால் தனி ஆணையத்திடம் நாளை பிற்பகல் 3 மணிக்குள் ஆதாரங்களை சமர்பிக்கலாம்” என்று கூறியுள்ளது.