வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது.
இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 4 நாட்கள் வரை நீடித்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்(DGMO), இந்தியாவின் டிஜிஎம்ஓ-விடம் தொலைபேசியில் பேசி ராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுத்ததை அடுத்து மே 10ம் தேதி ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது.
அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டதற்கு வர்த்தகத்தின் அடிப்படையில் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தையே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் விளக்கினார். இந்த உரையாடல் குறித்து பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “சமீபத்திய இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமெரிக்காவின் மத்தியஸ்தம் போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை என்பதை பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் தெளிவுபடுத்தினார்.
ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், இரு படைகள் தரப்பிலும் நேரடியாக விவாதிக்கப்பட்டது, மேலும் அது பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இருந்தது. இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியாவில் முழுமையான அரசியல் ரீதியான ஒருமித்த கருத்து உள்ளது.” என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனிர் உடனான சந்திப்பை அடுத்து இன்று (ஜூன் 19) செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்முறையாக இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததற்கு தான்தான் காரணம் என டொனால்ட் ட்ரம்ப் உரிமை கோரவில்லை. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்பிடம், சையத் அசிம் முனிருடனான சந்திப்பின்போது ஈரான் பற்றி விவாதிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், “பெரும்பாலானவர்களை விட அவர்களுக்கு(பாகிஸ்தானுக்கு) ஈரானை நன்றாகத் தெரியும். அவர்கள் எதிலும் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் இஸ்ரேலுடன் மோசமாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் இருவரையும் உண்மையில் அறிவார்கள். எனினும், அவர்கள் ஈரானை நன்கு அறிந்திருக்கலாம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், அவர்(முனிர்) என்னுடன் உடன்பட்டார்.
அவர் இங்கே இருக்கக் காரணம், போருக்குச் செல்லாமல், போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பிச்சென்றார். நாங்கள் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள பணியாற்றி வருகிறோம். பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நான் சில வாரங்களுக்கு முன்பு மோடியுடன் இருந்தேன். உண்மையில் அவர் இங்கே இருந்தார். இப்போது நாங்கள் அவருடன் பேசுகிறோம். இரண்டு புத்திசாலிகள், இரண்டு மிகப்பெரிய புத்திசாலிகள் அந்தப் போரைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது ஒரு அணுசக்திப் போராக இருந்திருக்கலாம். இரண்டு நாடுகளும் அணு சக்திகள். பெரிய அணுசக்தி சக்திகள். அவர்கள் அதை(ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்று) முடிவு செய்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.