இந்தியா – பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: ‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் மே 7-ம் தேதி துல்​லிய தாக்​குதல் நடத்​தி​யது. இதையடுத்​து, இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதை இந்​தியா முறியடித்​தது. இருதரப்​புக்​கும் இடையே நடை​பெற்ற சண்டை மே 10-ம் தேதி முடிவுக்கு வந்​தது.

இதுகுறித்து இந்​திய வெளி​யுறவு துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். ஆனால், அதற்கு முன்​பாக, ‘அமெரிக்​கா​வின் மத்​தி​யஸ்​தத்​தில் இரவு முழு​வதும் நடை​பெற்ற நீண்ட பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் முழு​மை​யான, உடனடி​யான போர்​நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளன’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலை​தளத்​தில் பதி​விட்​டார். இது இந்​தி​யா​வில் கடும் விமர்​சனங்​களை ஏற்​படுத்​தி​யது. இதன்பிறகும், இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்​தம் ஏற்பட நான்​தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பலமுறை கூறி வந்​தார். இதை மறுத்த இந்​தி​யா, ‘பாகிஸ்​தான் கேட்​டுக் கொண்​டதன் பேரில்​தான் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டது’ என கூறியது.

இந்​நிலை​யில், கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 17-ம் தேதி பங்​கேற்​றார். இதில் பிரதமர் மோடி​யும், ட்ரம்​பும் தனி​யாக சந்​தித்து பேச திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், இந்த மாநாட்​டில் 16-ம் தேதி பங்​கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு நாள் முன்​ன​தாகவே நாடு திரும்​பி​விட்​டார். இதனால் இரு தலை​வர்​களும் நேரில் சந்​திக்க முடிய​வில்​லை. இதையடுத்து இரு​வரும் தொலைபேசி​யில் சுமார் 35 நிமிடங்​கள் பேசினர். அப்​போது, இந்​தியா – பாகிஸ்​தான் போர் நிறுத்​தம் தொடர்​பாக இந்​தியா தரப்பு கருத்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்​பிடம் பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார்.

‘‘இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மிக​வும் துல்​லிய​மானது. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுடன் தொடர்​புடைய பாகிஸ்​தான் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் இருந்த தீவிர​வாத முகாம்​கள் மீது மட்​டும்​தான் இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. பாகிஸ்​தான் கேட்​டுக் கொண்​டதன் அடிப்​படை​யில்​தான் போரை இந்​தியா நிறுத்​தி​யது. இதுதொடர்​பாக இருதரப்பு ராணுவ​மும் நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்தி உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இந்த போர்​நிறுத்​தத்​தில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை. இரு நாடு​களுக்கு இடையி​லான விவ​காரத்​தில் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தம் செய்​வதை இந்​தியா ஒரு​போதும் ஏற்​காது” என்று அதிபர் ட்ரம்​பிடம் பிரதமர் மோடி உறு​திபட தெரி​வித்​து​விட்​ட​தாக மத்​திய வெளி​யுறவு துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி தெரி​வித்​தார்.

இந்த சூழ்​நிலை​யில், அமெரிக்கா சென்​றுள்ள பாகிஸ்​தான் ராணுவ தளபதி பீல்டு மார்​ஷல் அசிம் முனீர், அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். வெள்ளை மாளி​கை​யில் அவருக்கு விருந்து அளிக்​கப்​பட்​டது. இந்த சந்​திப்​புக்​குப் பிறகு ட்ரம்ப் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது ஈரான், இஸ்​ரேல் போர் மற்​றும் இந்​தி​யா​ உட​னான போர் நிறுத்​தம் குறித்த கேள்வி​களுக்கு ட்ரம்ப் கூறிய​தாவது: பாகிஸ்​தான் ராணுவ தளப​திக்கு ஈரான் விவ​காரம் பற்றி நன்​றாகத் தெரி​யும். இஸ்​ரேல், ஈரான் போர் பற்றி அவர் மகிழ்ச்​சி​யடைய​வில்​லை. பாகிஸ்​தான் இஸ்​ரேலுக்கு எதி​ரான நாடு அல்ல. அவர்​கள் இரு நாட்​டை​யும்
உண்​மை​யில் நன்கு அறி​வார்​கள்.

எனினும், அவர்​கள் ஈரானை நன்கு அறிந்​திருக்​கலாம். என்ன நடக்​கிறது என்​பதை அவர்​கள் பார்க்​கிறார்​கள். அவர் (முனிர்) என்​ கருத்​துடன் உடன்​படு​கிறார். இந்​தியா உடனான போரை தொட​ராமல் பாகிஸ்​தான் அதை முடிவுக்கு கொண்​டு​வந்​துள்​ளது. இதற்​காக நன்றி சொல்​வதற்​காகத்​தான் பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் உடனான சந்​திப்பு தற்​போது நடந்​துள்​ளது. போர்​நிறுத்​தம் ஏற்​ப​டா​விட்​டால், அது ஒரு அணுசக்தி போராக இருந்​திருக்​கலாம். இரண்டு நாடு​களும் பெரிய அணுசக்​தி​கள். ஆனாலும் போரை நிறுத்த அவர்​கள் முடிவு செய்​தார்​கள். இரண்டு புத்​தி​சாலிகள் போரை தொடர வேண்​டாம் என முடிவு செய்​தார்​கள். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்​தியா மற்​றும் பாகிஸ்​தானுடன் வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்ள நாங்​கள் பணி​யாற்றி வரு​கிறோம்.இவ்​வாறு ட்ரம்ப் கூறி​னார்.

‘‘இந்​தியா – பாகிஸ்​தான் போரை நிறுத்​தி​யது நான்​தான்’’ என்று ட்ரம்ப் தொடர்ச்​சி​யாக பலமுறை கூறிவந்த நிலை​யில், முதல்​முறை​யாக போர்​நிறுத்​தத்​துக்கு இரு நாடு​களின் தலை​வர்​கள்​ மட்​டுமே காரணம்​. அதில்​, அமெரிக்கா​வுக்​கு எந்​த பங்​கும்​ இல்​லை என்​று கருத்​து தெரிவித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.