புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் தாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான எஸ்சிஓ (SCO) அறிக்கையில் சேர வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை ஈரான் புரிந்துகொள்கிறது. ஆனால், ஈரானின் நிலைப்பாட்டை இந்தியா தாமாக ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் அரசாங்க இலக்குகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள “ஆட்சியின் சின்னங்கள்” மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“பாசிஜ் (போராளிகள்) போன்ற ஆட்சியின் அனைத்து சின்னங்கள் மற்றும் மக்களை ஒடுக்கும் வழிமுறைகள் மற்றும் புரட்சிகர காவல்படை போன்ற ஆட்சியின் அதிகார தளத்தின் மீது நாம் தாக்குதல் நடத்த வேண்டும்,” என்று காட்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வின் உயர்மட்ட உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பாஸ்கல் சிம், “இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின் தொடக்கத்தில் அப்பாஸ் அராக்ச்சி நேரில் பங்கேற்று உரையாற்றுவார். அதன் பிறகு கவுன்சில் அதன் வழக்கமான நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின்போது, ஈரானின் வெளியுறவு அமைச்சர், முன்னணி ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பிரிட்டன், ஜெர்மனி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஆகியோரை அப்பாஸ் அராக்ச்சி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு ராஜதந்திர தீர்வை அடைய வழி வகுக்கும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.