‘விஜய் பிறந்தநாள் பொதுக்கூட்டம்!’
தவெக தலைவர் விஜய்யின் தனது 51 வது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையின் வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் திமுகவைக் கடுமையாக அட்டாக் செய்து பேசியிருக்கிறார்.

என். ஆனந்த் பேசியதாவது, ”கோவிலம்பாக்கத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு இங்கே வருகிறேன். அங்கே நான் சென்றவுடனேயே மின்சாரத்தைத் துண்டித்துவிட்டார்கள். ஒரு 10 நிமிடம் மீண்டும் மின்சாரம் வந்தது. அடுத்தும் அணைத்துவிட்டார்கள்.
‘ஏன் பயப்படுறீங்க?’
என்னவென்று கேட்டால் மேலிடத்து உத்தரவு நாங்கள் என்ன செய்வது என்கிறார்கள். நல்லாட்சி நடத்துகிறோம் என்றுதானே சொல்கிறீர்கள்? பிறகு ஏன் எங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள். 2026 இல் மக்கள் சக்தியோடு எங்களின் தலைவர் முதல்வர் ஆவார்.

கூட்டத்துக்கு வந்த ஒரு அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘இந்தப் பக்கமாக எனக்கு 1000 ரூபாய் கொடுப்பதைப் போலக் கொடுக்கிறார்கள். அந்தப் பக்கம் என் கணவரிடம் ஹெல்மெட் இல்லையென்று அபராதமாக அதைப் பிடுங்கி விடுகிறார்கள்.’ என வருத்தமாகக் கூறினார். காவல்துறையினரைக் குறை சொல்ல முடியாது. எல்லாம் மேலிடத்து உத்தரவுதான்” என்றார்.