ரோம்: இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட ‘iRonCub3’ என்ற ஹியூமனாய்டு ரோபோவை பறக்க வைக்கும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இது ரோபாட்டிக்ஸ் துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஹியூமனாய்டு ரோபோவை வடிவமைத்துள்ளது. சவாலான சூழல்களில் செயல்படும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. இதன் மூலம் வழக்கமான ரோபோக்கள் செய்கின்ற வேலைகளை காட்டிலும் கூடுதல் டாஸ்குகளை செய்யும் நோக்கில் இதற்கு உயிர் கொடுத்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள்.
இதில் பயன்படுத்தபட்டுள்ள டைட்டானியம் 800 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும் என வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். தொடக்கத்தில் இதன் வடிவமைப்பு சார்ந்து சில சவால்கள் இருந்துள்ளன. அதற்காக மிலன் பாலிடெக்னிக் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து வடிவமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள நான்கு மைக்ரோ ஜெட் டர்பைன்கள், அட்வான்ஸ்டு ஏரோடைனமிக்ஸ் அம்சம் மற்றும் ஏஐ நியூரல் நெட்வொர்க் அடிப்படையிலான அமைப்பு போன்றவற்றை கொண்டு காற்றில் பறக்கும் தன்மையை கொண்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் தரையில் இருந்து சில சென்டிமீட்டர் உயரம் மேல் எழுந்து பறந்துள்ளது. சவாலான வானிலை சூழலையும் சமாளிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.
இந்த ரோபோவின் மொத்த எடை 70 கிலோ. இதன் ஏஐ அமைப்புக்கு ரியல் வேர்ல்ட் தரவுகள் மற்றும் சிமுலேஷன் தரவுகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.