இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது; நிறுத்தச் சொல்வது கடினம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: ஒப்பீட்டளவில் இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது என்றும், போரை நிறுத்துமாறு அந்நாட்டிடம் கோருவது இப்போதைக்கு கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் போரை நிறுத்தினால், தானும் நிறுத்திக்கொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவிக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “இப்போது அந்த கோரிக்கையை வைப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைப் பார்க்கும்போது நிறுத்துவது மிகவும் கடினம். இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது. ஈரானின் செயல்பாடு குறைவாகவே உள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். யாரையாவது நிறுத்தச் சொல்வது கொஞ்சம் கடினம்.

ஒருவர் வெற்றிபெறக்கூடிய நிலையிலும், ஒருவர் தோற்கும் நிலையிலும் இருக்கும்போது போர் நிறுத்தம் என்பது சற்று கடினம். எனினும், போர் நிறுத்தம் ஏற்பட நாங்கள் தயாராகவும், விருப்பமாகவும் இருக்கிறோம். நாங்கள் ஈரானுடன் பேசி வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்று அமெரிக்கா நம்புவதாக தேசிய புலனாய்வு இயக்குநரான துளசி கப்பார்ட் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த டொனால்டு ட்ரம்ப், “அப்படியானால், அமெரிக்க உளவுத்துறையில் இருப்பவர்கள் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். துளசி கப்பார்ட் கூறியது தவறு” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.