மும்பை துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டத்தில் ரூ.800 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக டாடா, ஜேஎன்பிடி நிறுவன முன்னாள் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பை அருகே உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை (ஜேஎன்பிடி) ரூ.800 கோடியில் ஆழப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்ட மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இதில் ஊழல் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக சிபிஐ முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. இதன் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஜேஎன்பிடி முன்னாள் தலைமை பொறியாளர் சுனில் குமார் மாதாபவி, டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (டிசிஇ) நிறுவனத்தின் முன்னாள் திட்ட இயக்குநர், போஸ்கலிஸ் ஸ்மித் இந்தியா எல்எல்பி, ஜன் தே நுல் ட்ரெட்ஜிங் இந்தியா மற்றும் சில அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, இது தொடர்பாக மும்பை, சென்னை நகரங்களில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.