"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" – ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலையும் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பதை மேற்கோள்காட்டி, நீட் தேர்வில் முழுக்க முழுக்க பணம்தான் விளையாடுகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

நீட் தேர்வு குளறுபடிகள் | NEET

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் ஷேர் செய்திருக்கும் பத்திரிகையாளர் ஒருவரின் ட்விட்டர் பதிவில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மருத்துவர் மற்றும் NTA அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என சிபிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், மாணவர்களின் பெற்றோர்களை ஹோட்டலில் சந்தித்து அவர்களிடம் ஒரு சீட்டுக்கு ரூ. 90 லட்சம் என பேரம் பேசி இறுதியில் ரூ. 87.5 லட்சத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைக் குறிப்பிட்டு ஸ்டாலின் தனது ட்வீட்டில், “நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, பணத்தைப் பற்றியது மட்டுமே என்பதை மேலும் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

இதனால்தான், நீட் ஒழுங்காக இல்லை என்று உரக்கச் சொல்கிறோம். அதற்கான காரணங்களும் எங்களிடம் இருக்கின்றன.

#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS – BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என்று விமர்சித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.