விசாகப்பட்டினம்,
நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் என்ற பெயரில், பெரிய அளவில் நாடு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல் மற்றும் சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் தூய்மை மற்றும் சுகாதாரம் வாய்ந்த துறைமுகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்து உள்ளது.
துறைமுக செயலாளர் வேணுகோபால் கூறும்போது, தூய்மை மற்றும் சுகாதார திட்ட நடவடிக்கையில், விசாகப்பட்டினம் துறைமுகம் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது என அமைச்சகம் மெச்சத்தக்க வகையிலான பாராட்டுகளை தெரிவித்து உள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
இந்த பட்டியலில் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2-வது இடம் பெற்றுள்ளது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் 3-வது இடம் பிடித்துள்ளது.