லக்னோ,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது . இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் திடீரென விலகினார். இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் துருவ் ஜூரல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்கள் , சாம் கான்ஸ்டாஸ் 49 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. கடைசி விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். ஆஸ்திரேலிய அணியில் டாம் மர்பி சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 76 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 420 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.