ஜெருசலேம்: இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். எனினும் ஹமாஸ் அமைதி காத்ததால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்தார்.
இந்நிலையில் அமைதிக்கு ஹமாஸ் தயாராக இருப்பதாகவும் பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிற நிபந்தனைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். மேலும் காசா மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த அறிவுரைக்கு அடுத்த சில மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஹமாஸின் ஒப்புதலை தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று அதிகாலை, “இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான டிரம்ப் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது’’ என அறிவித்தது.
மேலும் காசாவில் தாக்குதலை குறைக்க ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.