வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு

சண்டிகர்,

இந்திய நீதித்துறையில் சட்ட ஆராய்ச்சி மற்றும் வழக்கு மேலாண்மைக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு ‘சுபேஸ்’ மற்றும் ‘சுவாஸ்’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. அதேசமயம், செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு உதவி மட்டுமே என்றும், அது ஒருபோதும் மனிதனின் மனதையும் தீர்ப்பையும் மாற்றி விடக்கூடாது என்றும் மூத்த நீதிபதிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்தச்சூழலில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு வழக்கின் விசாரணையின்போது, வழக்கறிஞர் ஒருவர் தனது செல்போன் மூலம் கூகுள் அல்லது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். இதைக் கவனித்த நீதிபதி சஞ்சய் வசிஷ்த், அந்த வழக்கறிஞரின் செல்போனை பறிமுதல் செய்து அதிரடி உத்தரவிட்டார்.

மேலும், தனது உத்தரவில் நீதிபதி, ‘வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முன்பாகவே தங்களது வழக்குகளுக்கு தேவையான தகவல்களை சேகரித்து தயாராக வர வேண்டும். தங்களது வாதத்தின்போது செல்போன்களை நம்பியிருக்கக் கூடாது. ஐபேடுகள் மற்றும் லேப்டாப் போன்றவை தொழில்முறை கருவிகளாக கருதப்படுகின்றன. ஆனால் செல்போன்கள் வாதத்தின்போது பயன்படுத்த ஏற்ற கருவிகள் அல்ல’ என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.