வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போதைப்பொருள் கடத்தி வந்ததாக டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்படுவதாகவும், அந்த கடத்தல் கும்பல்கள் அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த கும்பல்களின் செயல்பாடுகளுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆதரவு அளிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேபோல், கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாகவும் கூறி வருகிறார். இதை தடுக்க கரீபியன் கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் கடற்படைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த சில வாரங்களாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக வெனிசுலாவை சேர்ந்த 3 படகுகளை அமெரிக்கா அழித்துள்ளது. அதேபோல், வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க போர் கப்பல்கள் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இது தங்கள் நாட்டின் இறையான்மையை மீறும் செயல் என்று வெனிசுலா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், வெனிசுலாவை சேர்ந்த மேலும் ஒரு படகை அமெரிக்கா நேற்று தாக்கி அழித்தது. கரீபியியன் கடல் வழியாக வெனிசுலா கடற்பரப்பில் போதைப்பொருட்களை கடத்தி வந்த படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தி வந்ததாக அமெரிக்கா தாக்குதல் நடத்திய 4வது வெனிசுலா படகு இதுவாகும். கடல் வழியாக மட்டுமின்றி இனி நிலம் வழியாகவும் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.