ஹோபர்ட்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் எப்படி விளையாட வேண்டுமோ அப்படியே மிகச்சரியாக விளையாடியதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதனை அவர் களத்தில் நின்று செய்து காண்பித்தார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வந்த வேளையில் மறுபுறம் இருந்த திலக் வர்மாவிற்கு அழுத்தம் கூடியது.
ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மீது அழுத்தத்தை போட்டார். இப்படி எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை போடுவது டி20 போட்டிகளில் மிக முக்கியம். அதனை வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக செய்தார்.
அதன் காரணமாக எதிர்ப்புறம் திலக் வர்மாவிற்கு அழுத்தம் குறைந்தது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மைதானத்தின் இரண்டு புறங்களிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை காண்பித்திருந்தார். இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே டாப் கிளாஸ். இவ்வாறு அவர் கூறினார்.