360 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.-47 பறிமுதல்: காஷ்மீர் டாக்டர் கைது; பயங்கரவாத சதி முறியடிப்பு

ஜம்மு,

ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் அகமது ராதர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த தகவலின் பேரில், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் ஏ.கே.47 துப்பாக்கி, ஒரு கேரம் கோக் ரைபிள், இரண்டு தானியங்கி கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், ஐந்து லிட்டர் ரசாயனங்கள், பேட்டரியுடன் கூடிய 20 டைமர்கள் மற்றும் 14 பைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, முஜாமில் ஷகீலை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.