கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை.
மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார்.
மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஐமுரி பகுதியிலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. லீலாமணி வசிக்கும் அதே பகுதிக்கு மோகன்லால் படப்பிடிப்புக்கு வந்திருப்பதை அறிந்தவர் தனது பேரனுடன் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார்.

மோகன்லாலை சந்திக்கப் போகிறோம் என புது சேலையை வாங்கி அணிந்து சென்றிருக்கிறார். மோகன்லாலை காண ரசிகர்களும் குவிந்திருக்கிறார்கள். அவர்கள் எவரையும் படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு அருகில் அனுமதிக்கவில்லை.
பலரும் மோகன்லாலை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், லீலாமணி மோகன்லாலை சந்தித்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என உறுதியாக இருந்திருக்கிறார்.
அங்கிருந்த படக்குழுவினரிடமும் மோகன்லாலை சந்தித்த பிறகுதான் கிளம்புவேன் என பிடிவாதமாகச் சொல்லியிருக்கிறார். மாலை 5 மணிக்கு, தன்னை சந்திப்பதற்காக மூதாட்டி ஒருவர் காத்திருப்பதை அறிந்தவர் லீலாமணியை சந்திக்கச் சென்றிருக்கிறார்.
மோகன்லாலை சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தவர் ‘உங்களை ஒருமுறை தொட்டுக்கொள்ளட்டுமா’ என ஆசையோடு கேட்டிருக்கிறார். லீலாமணி இந்த வார்த்த்தையைச் சொன்ன அடுத்த நொடியே அவரை அரவணைத்துக்கொண்டிருக்கிறார்.
அவருக்கு தான் ஒரு பாடல் வைத்திருப்பதாகவும், அதை அவர் முன் பாட வேண்டும் என்கிற ஆசையையும் லீலாமணி தெரிவித்திருக்கிறார். நேரம் காரணமாக அந்தப் பாடலை அவரால் மோகன்லாலிடம் பாடிக் காண்பிக்க முடியவில்லை.

இது குறித்து லீலாமணி, “நான் மோகன்லால் சாருடைய மிகப் பெரிய ரசிகை. அவர் நடித்த அனைத்துப் படமும் டிவியில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அவருடைய படங்களில் ‘ஆராம் தம்புரான்’ படம் மிகவும் பிடிக்கும்.
எனது பிள்ளைகளுடன் இணைந்து ‘துடரும்’ படத்தை கடைசியாகப் பார்த்தேன். ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். மூன்றாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என மோகன்லாலை சந்தித்த மகிழ்ச்சியில் கூறினார்.