Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி – குவியும் வாழ்த்துகள்!

வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடிக் குழு சீன தைபே அணியை 35–28 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் அணி தொடர்ந்து இராண்டாவது முறையாக உலகக்கோப்பையை வெல்வது குறிப்பிடத்தக்கது.

India won women's Kabaddi World Cup
India won women’s Kabaddi World Cup

இந்த வெற்றி குறித்து இந்திய (ஆண்கள்) அணியின் முன்னாள் கேப்டன் அஜய் தாக்கூர், “டாக்காவில் நடந்த உலகக் கோப்பையை மகளிர் அணி தக்கவைத்துக் கொண்டது இந்தியாவிற்கு மிகவும் பெருமைக்குரிய தருணம். இறுதிப் போட்டி வரையிலும், பிறகு கோப்பையை வென்றதிலும் அவர்களின் ஆதிக்கம், கடந்த சில ஆண்டுகளில் மகளிர் கபடி எவ்வளவு பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

வங்கதேசம் இந்த உலகக் கோப்பையை நடத்துவது, இந்த விளையாட்டின் உலகளாவிய ஈர்ப்புக்கு ஒரு சிறந்த சான்று. இந்த வேகம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்தது இந்திய மகளிர் அணி. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஈரானை 33–21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கெத்தாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இதற்கு இணையாக சீன தைபெய் அணியும் தோல்வியே இல்லாமல், அரையிறுதியில் வங்காளதேசத்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தத் தொடர்தான், மகளிர் கபடி வரலாற்றில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், 2012-ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றன. அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா. இப்போது இரண்டாவது முறையும் கோப்பையை நம் பெண்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்!

(சீனா தைபெய் என்பது தைவான் நாட்டின் விளையாட்டு அணிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயராகும்.)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.