இன்னும் முடியலை.. அடுத்தடுத்து கொரோனா வேரியன்ட்கள் உருவாகும்.. ஹூ

கொரோனா பேரிடர் காலம்
முடிந்து விட்டதாக யாரும் கருதாதீர்கள். அடுத்தடுத்து வேரியன்ட்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. இந்தியா 3 அலைகளைப் பார்த்து விட்டது. 3வது அலையில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தது. அதேசமயம், மிக வேகமாக இது உச்சம் எட்டி விட்டது. உயிரிழப்புகள் முந்தைய இரு அலைகளை விட குறைவுதான். இருப்பினும் ஓமைக்ரான் பரவலின்போது பல மாநிலங்களில் அதிக உயிரிழப்புகளும் பதிவாகின.

ஓமைக்ரான் பரவலுடன் கொரோனா பேரிடர் காலம் முடிவுக்கு வரும். அடுத்து பெரிய பாதிப்புகள் வராது. கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது இதுதான் கடைசி அலை என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் பேரிடர் காலம் இன்னும் முடியவில்லை. அடுத்தடுத்து வேரியன்ட்கள் வரும் என்று உலக சுகாதார அமைப்பான
ஹூ
கூறியுள்ளது.

கேப்டவுனில் இதுதொடர்பாக பேசிய ஹூ தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறுகையில், இன்னும் கோவிட் 19 பேரிடர் காலம் உலகின் எந்தப் பகுதியிலும் முடிவுக்கு வரவில்லை. மேலும் பல வேரியன்ட்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கொரோனாவைரஸ் அடுத்தடுத்து உருமாறி, புதிய புதிய வேரியன்ட்கள் வந்ததை நாம் பார்த்தோம். இந்த மியூட்டேஷன் சில காலத்திற்கு நீடிக்கும், புதிய வேரியன்ட்கள் தொடர்ந்து வரும். நமக்கு கவலைகள் இன்னும் போகவில்லை. இன்னும் இருக்கின்றன. எனவே யாரும் பேரிடர் காலம் முடிந்து விட்டதாக கருதி விட வேண்டாம்.

சவும்யா மேலும் கூறுகையில், பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் கொரோனா தடுப்பூசி திட்டம் சரிவர இல்லை. இதுதான் பல வேரியன்ட்கள் உருவாக முக்கியக் காரணம் என்றும் சவுமியா குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.