விடாது பெய்யும் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 117 பேர் பலி!

பிரேசில் நாட்டில், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைப் பிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை – 18 பேர் உயிரிழப்பு!

மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதை தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நிலச்சரிவில் இருந்து 24 பேரைக் காப்பாற்றி உள்ளதாகவும், 439க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.