'அயோத்தியில் 2023க்குள் ராமர் கோவில்!' – முதல்வர் ஆதித்யநாத் உறுதி!

அயோத்தியில், வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத்
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் 20 ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று, உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை எதிர்த்து,
பாஜக
சார்பில் போட்டியிடும், மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.எஸ்.பெகாலை ஆதரித்து, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

அயோத்தியில், வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் பிரமாண்ட ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும். மத்திய – மாநில அரசுகளின் இணைந்து செயல்படுவதால், இரட்டை இன்ஜின்களோடு இயங்குவதால், மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கின்றன. இதனால் அவர்களின் ஓட்டுகள் பாஜகவுக்கே செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தில் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், விவசாயிகளுக்கு குழாய் கிணறு வசதி மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.