கொலை – கடத்தல் நடக்குது.. அதை விட்டு விட்டு.. நிதீஷ் குமாரை தாக்கிய தேஜஸ்வி யாதவ்

தினசரி பீகாரில் கொலைகள் நடக்கிறது, கடத்தல் நடக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் நிதீஷ் குமார் சந்திக்கலாம். அதை விட்டு விட்டு பிரஷாந்த் கிஷோரை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் என
ராஷ்டிரிய ஜனதாதளம்
தலைவர்
தேஜஸ்வி யாதவ்
குத்திக் காட்டியுள்ளார்.

அரசியல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் நேற்று
பீகார்
முதல்வரும்,
ஐக்கிய ஜனதாதளம்
தலைவருமான நிதீஷ் குமாரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நேற்று பரபரப்பையும், பல்வேறு எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்த சந்திப்பு குறித்து தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிதீஷ் குமார் யாரைச் சந்தித்தார் என்பது பிரச்சினை அல்ல, அது அவரது பிசினஸ். அதைப் பற்றி நாம் கருத்து சொல்ல முடியாது. ஆனால் பீகாரில் தினசரி பலர் கொலை செய்யப்படுகிறார்கள். பலர் கடத்தப்படுகிறார்கள். மாபியாக்கள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. இதில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நிதீஷ் குமார் சந்தித்துப் பேசினால் நலமாக இருக்கும் என்றார் தேஜஸ்வி யாதவ்.

பிரஷாந்த் கிஷோர் முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். நிதீஷ் குமாருக்கும் ஆலோசனை கூறி வந்தார். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருந்தாலும் நிதீஷ் குமாருடன் அவருக்கு தனிப்பட்ட முறையில் நல்லுறவு நீடித்து வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து நிதீஷ் குமார் கூறுகையில், இன்று நேற்றா நாங்கள் பழகி வருகிறோம். இதில் அரசியலுக்கு எதுவும் இல்லை. அவருடன் உள்ள நட்பின் அடிப்படையில் நடந்த சந்திப்பு. இதில் எந்தவிதமான சிறப்பு அம்சமும் இல்லை. மிகவும் சாதாரணமான சந்திப்புதான் என்றார் நிதீஷ் குமார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது அந்தக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார் பிரஷாந்த் கிஷோர். 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் மகா கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டார். இதில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவை இணைந்திருந்தன. தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் பிரிந்து விட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.