ஆப்பரேஷன் கங்கா: டெல்லி புறப்பட்டது 9ஆவது விமானம்!

உக்ரைன்
மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.

அதேசமயம்,
ஆப்பரேஷன் கங்கா
என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து, ஏர் இந்தியா சிறப்புவிமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

உக்ரைனில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை சுமார் 2,000 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். உக்ரைனில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9ஆவது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.