ஒரே மேடையில் மூன்று முன்னணி கதாநாயகிகள்

தமிழ் சினிமா விழாக்களில் இப்படியெல்லாம் நடக்குமா என்பது ஆச்சரியம்தான். இங்கு நடைபெறும் பல சினிமா விழாக்களில் அந்தப் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கலந்து கொள்வதே கிடையாது. இது பற்றி பல தயாரிப்பாளர்கள் பல முறை விழாக்களில் பேசியும் நடிகைகள் அதைக் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை.

ஆனால், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிக்கும் முன்னணி நடிகைகள் அவர்கள் நடிக்கும் படங்களின் விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் தவறாமல் கலந்து கொள்வார்கள். நேற்று ஐதராபாத்தில் தெலுங்குப் படமான 'ஆனவாலு மீகு ஜோஹார்லு' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழாவில் மூன்று முன்னணி கதாநாயகிகள் கலந்து கொண்டு விழாவை கலர்புல்லாக்கினார்கள்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, மற்றும் தெலுங்குத் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ் நடிகைகளான கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மெல்லிய புடவை அணிந்து கவர்ச்சிகரமாக வந்திருக்க, சாய் பல்லவி, தகதகவென மின்னும் சேலையில் வந்திருந்தார். கீர்த்தி சுரேஷ் தகதகவென இருந்த சுடிதார் அணிந்து வந்திருந்தார். ஒரே மேடையில் மூன்று முன்னணி கதாநாயகிகளைப் பார்த்த ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகவே ஒலித்தது.

'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் குஷ்பு, ராதிகா, ஊர்வசி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிஷோர் திருமலா இயக்கியுள்ள இப்படம் மார்ச் 4ம் தேதி வெளியாகிறது. படத்தைத் தெலுங்கில் மட்டும்தான் வெளியிடுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.