'கீவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின்
கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஆறு நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து வருவதால், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, “ஆப்பரேஷன் கங்கா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் இருந்து,
இந்தியர்கள்
அனைவரும் இன்றைய தினத்திற்குள் வெளியேறும்படி, உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும், இன்றைக்குள், கீவ் நகரில் இருந்து அவசரமாக வெளியேற வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய ரயில்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலமாகவோ வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.