இரண்டு பட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர் பக்கம் வரும் சூர்யா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோருக்குப் பிறகு அதிக ரசிகர்கள், ரசிகைகளுடன் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் வரும் மார்ச் 10ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இரண்டு பட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வந்துள்ளார். அவர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த 'காப்பான்' படம் தான் தியேட்டர்களில் வெளியான அவருடைய கடைசி படம். அதற்குப் பிறகு அவர் நடித்த 'சூரரைப் போற்று' 2020ம் ஆண்டும், 'ஜெய் பீம்' படம் 2021ம் ஆண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகின. அதற்காக சூர்யாவுக்கு தியேட்டர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. இருப்பினும் இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுக்கள் கிடைத்தது.

தனது படங்களை ஓடிடி தளங்களில் சூர்யா வெளியிட்ட போது தியேட்டர்காரர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். ஆனால், இப்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தை ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனம் தயாரித்து வெளியிடுவதால் அவர்கள் அமைதி காக்கிறார்கள். வேறு எந்த நிறுவனமாவது படத்தைத் தயாரித்திருந்தால் நிச்சயம் சில பல சர்ச்சைகளை சூர்யா சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.