தனியார் பேருந்து நடத்துநரின் பையில் இருந்து கூட்ட நெரிசலில் இடித்தவாறு ரூ.2000ஐ லாவகமாக திருடிய பெண் – 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியார் பேருந்து நடத்துநரின் பணப்பையில் இருந்து 2  ஆயிரம் ரூபாயைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்ற பெண் உட்பட 4 பேரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முத்தனேந்தல் வந்தபோது, 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் நடத்துநரை இடித்துத் தள்ளியவாறு, அவசர அவசரமாக இறங்கினர்.

அப்போது அந்த 4 பேரில் ஒரு பெண், நடத்துநரின் பணப் பையில் இருந்து லாவகமாக பணத் தாள்களை எடுத்துக் கொண்டு இறங்கி ஓடப் பார்த்திருக்கிறார்.

இதனை கவனித்துவிட்ட சக பயணி ஒருவர் நடத்துநரிடம் கூறவே, உடனடியாக அந்தப் பெண்ணை மடக்கினர். பிறகுதான் அவருடன் இறங்கிய மற்ற மூவரும் ஒரே கும்பல் என்பது தெரியவந்தது. அதே பேருந்தில் 4 பேரையும் அழைத்துச் சென்று மானாமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

பேருந்தில் ஏறி முன்பக்கம் பின்பக்கம் என பிரிந்து உட்கார்ந்து கொண்டு ஏமாறும் பயணிகளிடம் பணத்தைத் திருடுவது இவர்களது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.