ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’எனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதில், எவ்வித தொடர்பும் இல்லாத நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என்னை இந்த வழக்கில் தவறாக இணைத்துள்ளனர் . முன்னாள் அமைச்சரான எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.