டுவீட் போட்டு டெலிட் செய்த கார்த்திக் நரேன்

தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் நடித்த 'மாறன்' படம் நேற்று மாலை ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த மிக மோசமான படங்களில் இதுவும் ஒன்று என்றுதான் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

படம் பற்றிய விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டுவிட்டரில் “ரைட்டு…உண்மைய அப்றோம் சொல்றேன்” எனப் பதிவிட்டு அதை சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். இப்படம் தொடர்பாக ஏற்கெனவே சில சர்ச்சையான செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே எதுவும் பதிவிடாத படத்தின் நாயகன் தனுஷ் நேற்று மாலை படம் வெளியாகும் நேரத்தில், “மாறன், இனி உங்களுடையது…ஓம் நமச்சிவாயா” எனப் பதிவிட்டிருந்தார்.

கார்த்திக் நரேன் எதற்காக அப்படி ஒரு டுவீட் போட்டு டெலிட் செய்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம். தான் முதலில் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' படம் மூலம் பாராட்டுக்களையும், சிறப்பான விமர்சனங்களையும் பெற்றவர் கார்த்திக் நரேன்.

அடுத்து அவர் இயக்கிய 'நரகாசூரன்' படம் இன்னும் வெளியாகவில்லை. அப்படத்தை இயக்க கார்த்திக் நரேனை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் கவுதம் மேனன். 'இளம் திறமைசாலி இயக்குனர்' எனப் பாராட்டி அப்போது டுவீட் போட்டவர் கவுதம். ஆனால், படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையில் மிகப் பெரும் சண்டையே நடந்து முடிந்தது. படம் முடிந்து நான்காண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

அதற்கடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த 'மாபியா' படமும் ஓடவில்லை. நான்காவதாக அவர் இயக்கிய படம்தான் நேற்று வெளிவந்த 'மாறன்'. தனது முதல் படத்தில் நல்ல பெயரை வாங்கிய கார்த்திக் நரேன், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஒரு இயக்குனராகத்தான் பெயர் வாங்கியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.