பண மோசடி வழக்கு; பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் விளக்கம்

தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ். இவரது மகன் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ். தற்போது தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான சத்ரபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதன் மூலம் தற்போது ஹிந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சிரவன் குமார் என்பவர் பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இருவர் மீதும் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தை கோபிசந்த் மாலினி இயக்கத்தில் தயாரிக்கப் போவதாகவும் அந்த படத்தில் தன்னையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்வதாக பெல்லம்கொண்டா சுரேஷ் கூறியதால் பல தவணைகளில் 85 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ஆனால் அப்படி ஒரு படத்தை அவர்கள் தயாரிக்கவும் இல்லை, தன்னுடைய பணத்தை திருப்பித் தரவும் இல்லை என தனது மனுவில் குற்றச்சாட்டாக கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி பெல்லம்கொண்டா சுரேஷ் மற்றும் அவரது மகன் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் இருவர் மீதும் சிட்டி கிரைம் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இந்த நிலையில் தந்தை மகன் இருவரும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இந்த வழக்கு குறித்த உண்மை நிலவரம் என்ன என விளக்கம் அளித்தனர். அதில் பெல்லம்கொண்டா சுரேஷ் கூறும்போது, 'இந்த வழக்கு தொடர்ந்துள்ள சிரவன் குமார் என்பவர் என்னுடைய ஊர்க்காரர் தான். அவ்வப்போது என்னிடம் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் கேட்பது வழக்கம்.. அவ்வளவுதானே தவிர, அவருடன் எந்தவிதமான பண பரிவர்த்தனையும் நான் வைத்துக்கொண்டதில்லை.

அவர் ஆதாரம் இல்லாமல் என் மீதும் என் மகன் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். அப்படி அவரிடம் நான் பணம் வாங்கி மோசடி செய்ததாக நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்' என்று கூறியுள்ள பெல்லம்கொண்டா சுரேஷ். தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் யாரும் அவதூறு பரப்புவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இதுகுறித்து சிரவன் குமார் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.