ரூ.85 லட்சம் ஏமாற்றிய புகாரில் தயாரிப்பாளர், நடிகர் மீது மோசடி வழக்கு பதிவு

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகர நீதிமன்ற உத்தரவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு (சிசிஎஸ்) போலீசார், ரூ.85 லட்சம் மோசடி செய்த புகார் அடிப்படையில் தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், அவருடைய மகனும், நடிகருமான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் ஷ்ரவன் குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2018ல் புதுப்படம் தயாரிப்பதற்காக பெல்லம்கொண்டா சுரேஷ், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் என்னிடம் ரூ.85 லட்சத்தை தவணை முறையில் வாங்கினர். கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் என்னை இணை தயாரிப்பாளராக அறிமுகம் செய்வதாக கூறினர். அவர்களுடைய வார்த்தையை நம்பி பணம் கொடுத்த என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். எனவே, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் பெல்லம்கொண்டா சுரேஷ், அவரது மகனும், நடிகருமான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 417, 420 (ஏமாற்றுதல்), 120 பி (குற்றச்சதி) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.